ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண், ஒசூர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்துள்ளார்.
அவரை முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்(24) என்னும் இளைஞர், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தை வெங்கடசாமி என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, உன் மகளை கடத்திவிட்டோம். 10 லட்சம் ரூபாய் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த அவர், தனது மகளை உறவினர்களுடன் இணைந்து தேடத் தொடங்கியுள்ளார்.
இருப்பினும் அவரைப் பற்றி தகவல் இரவு முழுவதும் தெரியவில்லை. இந்நிலையில் இன்று இராமன்தொட்டி என்ற இடத்தில் இளம் பெண் மர்மமான முறையில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
வனப்பகுதியான அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்து அங்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரதேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், ஸ்ரீதர் தனது காதலியை நேற்று மாலை வெளியில் செல்வோம் என அழைத்து சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீதர் இராமன்தொட்டி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று முதலில் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதில் பயந்த அந்த இளம் பெண் தன் அக்காவுக்கு தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டுள்ளார்.
உரிய பதில் கிடைக்காததால் அந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்த செல்போன் உரையாடலையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு பேரிகை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.